» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்: தமிழக அரசு தாக்கல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:34:51 PM (IST)
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வரைவு வழிகாட்டு விதிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு என தமிழக அரசு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, திட்டமிடுவதற்கு, முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
5 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும். வழிபாட்டு தளங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இந்த வழிக்காட்டு நெறிமுறைகள் பொருந்தாது.
நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும். இருப்பினும், கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு ஆகும்.
5 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு இது பொருந்தாது. ஆனால் தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும்.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவை நடைபெற உள்ள இடங்களை காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்து அறிவிப்பார்.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
ரோடு ஷோக்களை பொருத்தவரை பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
இது மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
50 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்பார்க்க கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். திடீரென ஏற்பாடு செய்யப்பட கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பொருத்தவரை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு என்றும் நிகழ்ச்சியின் போது, பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து வழங்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகளை நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு கட்சிகளும் எதிர்க்கும் என்பதால், வரைவு விதிமுறைகளின் நகல்களை தவெக உள்ளிட்ட மனுதாரர் கட்சியினருக்கு வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வரைவு வழிகாட்டு விதிகள் நகல்களை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என தவெக உள்ளிட்ட மனுதாரர் கட்சிகள் கோரிக்கை வைத்தது. மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக, தேசிய மக்கள் சக்தி கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு விதிகள் நகல்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 27 ம் தேதிக்கு தள்ளிவைத்தது தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:43:39 PM (IST)

இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடியில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:41:13 PM (IST)

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக் குறைவாக அனுப்பியுள்ளது: எடப்பாடி பழனிசாமி
வெள்ளி 21, நவம்பர் 2025 4:22:15 PM (IST)

விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:00:56 PM (IST)

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:39:47 PM (IST)


.gif)