» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

பழிக்குப்பழியாக கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நெல்லை மாவட்டம் அம்பை அருகே வாகைகுளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (32). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டு கிருஷ்ணனின் அண்ணன் மூக்கன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு செல்வராஜின் தந்தை வேம்பு உதவியதாக கூறப்படுகிறது.

இதற்கு பழிக்குப்பழியாக கடந்த 2000-ம் ஆண்டு வேம்புவை கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் வெட்டிக்கொலை செய்தனர். அதன்பிறகு கிருஷ்ணனை பழிக்குப்பழியாக செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.

கடந்த 24-1-2013 அன்று செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அன்று இரவு 1 மணி மணியளவில் நெல்லை அருகே பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் வளாகத்தில் அனைவரும் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கிருஷ்ணன், சவரிமுத்து (37), பாக்கியராஜ் (40), விஜய் (31) ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்வராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, முதலாவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கிருஷ்ணன் இறந்து விட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்ட சவரிமுத்து, பாக்கியராஜ், விஜய் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதில் விஜய் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கருணாநிதி ஆஜராகி வாதாடினார்.

நடப்பாண்டில் இதுவரை 18 கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஒருவருக்கு மரண தண்டனையும், 63 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் 21 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள் என்று மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory