» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் ரூ.71 கோடியில் புதிய விண்கல கட்டுப்பாட்டு மையம்: இஸ்ரோ திட்டம்
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:35:47 AM (IST)
நெல்லையில் ரூ.71 கோடியில் புதிய விண்கல கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க இஸ்ரோ ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி ரோகினி செயற்கைக்கோளை பொருத்தி எஸ்.எல்.வி.3 இ-10 என்ற முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது. தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகிறது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 350 ஏக்கர் பரப்பளவில் ரூ.986 கோடி மதிப்பில் இஸ்ரோவின் 2-வது ஏவுதளம் அமைக்கும் பணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்த விண்வெளி ஏவுதளமானது விண்வெளி தொழில் பூங்காவுடன் இணைந்து செயல்பட இருக்கிறது.
தற்போது, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, ஏவுதளம் அமைப்பதற்கான முக்கிய கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், விண்வெளி தொடர்பான புதிய தொழில் நிறுவனங்கள் ஆகியவை இப்பகுதியில் அமைய ஆர்வம் காட்டி வருகின்றன.
இதனை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசும் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ‘விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா' அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதற்கிடையே, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், ரூ.71 கோடி மதிப்பில் ‘புதிய விண்கல கட்டுப்பாட்டு மையம்' ஒன்றை அமைக்கும் பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை இஸ்ரோ கோரியுள்ளது. இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களை கண்காணிப்பது, கட்டளைகள் பிறப்பிப்பது, தகவல்களைப் பெறுவது போன்ற முக்கியமான பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும். கட்டுமானம், மின்னணு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் 9 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஏற்கனவே நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் அமைந்துள்ளது. இது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஒரு முக்கிய ஆராய்ச்சி மையமாகும். இதில் ராக்கெட் என்ஜின்கள் மற்றும் உந்துவிசை அமைப்புகளின் திறன் சோதனைகள் நடத்தப்படுகின்றன. நெல்லைக்கு ஏற்கனவே பல சிறப்புகள் இருந்தாலும், தற்போது நெல்லை மாவட்டத்தில் புதிய விண்கல கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுவதன் மூலம் இஸ்ரோ நெல்லைக்கு கூடுதலாக பெருமை சேர்க்கிறது. மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:44:12 PM (IST)

கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் மன வருத்தம் அளிக்கிறது : நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:51:42 PM (IST)

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம்: அன்புமணி வலியுறுத்தல்
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:28:28 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:19:09 PM (IST)

கோவில்பட்டி மேற்கு நிலையத்திற்கு முதல்வர் விருது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:40:33 PM (IST)

அனல்மின்நிலைய ஒப்பந்தத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 12:46:45 PM (IST)
