» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு : சிறுவனுக்கு போலீசார் பாராட்டு!

வியாழன் 31, ஜூலை 2025 8:46:42 AM (IST)



நாசரேத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை, காப்பாற்றிய சிறுவன் சிவபாலுவை  போலீசார் பாராட்டி பரிசு வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில் ரோடு மணிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். அவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு சிவபாலு (14) என்ற மகன் உள்ளார். சிவபாலு சம்பவத்தன்று காலையில் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையோரம் உள்ள முட்புதருக்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த சிவபாலு குழந்தையின் சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்து சென்று பார்த்தான்.

அப்போது முட்புதருக்குள் வெறும் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கதறி அழுதுக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். துரிதமாக செயல்பட்ட சிவபாலு முட்புதருக்குள் சென்று குழந்தையை தன் கையில் எடுத்தான். சிறிதும் தாமதிக்காமல் குழந்தையை கையில் ஏந்தியவாறு ஊருக்குள் ஓடிச்சென்றான்.

அங்கிருந்த அக்கம்பக்கத்தினரிடம் குழந்தையை காட்டி நடந்த விவரத்தை கூறினான். இதுகுறித்து தகவலறிந்ததும் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி விரைந்து வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்தபோது, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தைரியமாக முட்புதருக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய சிவபாலு மற்றும் அவனுடைய பெற்றோரையும் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பாராட்டி பரிசு வழங்கினார்.

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் காப்பக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து சிலமணி நேரமே ஆகியிருப்பதால் அதிகாலை நேரத்தில் இங்கு வந்து யாரேனும் வீசியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? அல்லது வேறு பகுதியில் பெற்றோரிடம் இருந்து கடத்தப்பட்டு இங்கு கொண்டுவந்து வீசப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory