» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்கள்தான் மாற்று என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள்: மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஞாயிறு 1, ஜூன் 2025 4:04:22 PM (IST)



நாங்கள்தான் மாற்று என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும் என மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின் உரை வருமாறு: வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும், தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் பகையை எதிர்கொண்டு முறியடிக்க வியூகங்கள் அமைக்கவும் - வெற்றியை நோக்கி உழைக்கவும், இந்தப் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம். இங்கு கூடியிருக்கும் உங்களை பார்க்கும்போது, புது எனர்ஜி வருகிறது.

மதுரையில் ஆறு பொதுக்குழு நடைபெற்றிருக்கிறது. இது ஏழாவது பொதுக்குழு! ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில், இந்த மாபெரும் பொதுக்குழுவை எழுச்சியுடன் ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.

அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், "ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது. திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. "இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது.

‘உங்களால்தான் முடியும்...’ என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்.

சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது. கழகம் எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும். உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும்.

திமுக.வுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், திமுக ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.

பொருளாதாரரீதியான முட்டுக்கட்டைகள், அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பாஜக அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, திமுகவுக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக அவதூறுகளை வீசுவார்கள். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும்.

கூட்டணியும் காரணம்: நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி. 2017-ஆம் ஆண்டு முரசொலி பவள விழாவில் நம்முடைய பயணம் தொடங்கியது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான்.

நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி - விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.

அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார். அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு. என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை. அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை.

ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அதிமுக. அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார். நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

பாஜக கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது! இந்தி மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் "நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.

ரூ.10 லட்சம் நிதியுதவி: தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம் - என் கட்சி - என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடைய தொண்டர்கள். "நானும் - என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம்.

அந்த வகையில், கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்.

புதிதாக 2 அணிகள்: கழகத்தில் இப்போது 23 அணிகள் இருக்கிறது. புதிதாக இரண்டு அணிகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது! இதில் பெரும்பாலான அளவில், நிர்வாகிகள் போடப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிரப்பப்படாத பொறுப்புகளில் இளைஞர்களை நியமனம் செய்யுங்கள்! அணிகள் அனைத்துமே, தாய்க் கழகத்திற்கு வலு சேர்க்கத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்.

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் வந்து உங்களை சந்திப்பார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட வேண்டும். 234 தொகுதிகளில் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அவர்கள் பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தலை சந்திக்க கழகத்தின் கட்டமைப்புகளை ஓராண்டுக்கு முன்பே முழுமையாக அமைத்துவிட்டோம். இதை வரும் காலங்களில் செயல்படுத்தினாலே பெரிய வெற்றியை எளிதாக அடையலாம்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ முதல் இரண்டு மாதங்களுக்கு, உங்களுடைய முதல் பணி என்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை. சிறப்புத் தீர்மானம் இயற்றியபடி, சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் கொடுத்தபடி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம். வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும். தி.மு.க.வின் திட்டங்களை, சாதனைகளை, உரிமைப்போராட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள். இன்றைய நிலையில் கழக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத குடும்பமே தமிழ்நாட்டில் இருக்காது. ஒவ்வொரு குடும்பத்திலும் தி.மு.க.வுக்கு மகத்தான ஆதரவு இருக்கிறது. அவர்களில் ஆர்வமுள்ளவர்களை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவத்தை, விரைவில் அறிவாலயத்துக்கு வந்து பெற்று செல்ல வேண்டும். இந்தப் பணியை நானே தொடர்ந்து ஆய்வு செய்வேன். இங்கு வந்திருக்கும் நிர்வாகிகளுக்கு நான் போன் மூலமாக, தொடர்பு கொண்டு பேசுவேன். அப்போது எவ்வளவு உறுப்பினர் சேர்க்கை செய்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

மைக்ரோ மேனேஜ்மெண்ட் முக்கியம் பாஜகவிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு இதுமட்டும் போதாது! பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றிபெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி! அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம்.

வெற்றிச் செய்தியை தாருங்கள் - "ஒருவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் அதை சிறப்பாக செய்ய வேண்டும். "தலைவர் சொன்ன பணியை முடித்துவிட்டோம், வெற்றி பெற்றுவிட்டோம்” என்று சொல்ல வேண்டும். நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது, அந்த வெற்றிச் செய்தியை மட்டும்தான். நான் கொடுத்த பொறுப்பை, சரியா செய்து அந்த வெற்றிச் செய்தியை தாருங்கள் என்பதுதான் என்னுடைய இந்தப் பொதுக்குழுச் செய்தி.

திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்த - சட்டமன்றத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும். அதில் மீண்டும் ஒன்றாக சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory