» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வள்ளுவரை சனாதன துறவி என்பதா? ஆளுநர் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்!

சனி 31, மே 2025 5:15:55 PM (IST)

வள்ளுவரை சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். திருக்குறளின் மேன்மை அறிந்த மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என அவரை போற்றிக் கொண்டாடினார்.

நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர் சுவைட்சர் "வள்ளுவரின் அறநெறியில் காணும் பேரறிவு, உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்த ஜி.யூ.போப் "மொழி, இனம், சமயம், நாடு என எல்லா எல்லைகளையும் அனைத்துலக மனிதனைப் பற்றி பாடியவர் வள்ளுவர்” என்கிறார்

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து - கெடுக உலகியற்றியான்.” என கற்பனை கருத்தியலை சாடி, உழைப்பின் மேன்மை குறித்து திரும்ப, திருப்ப எடுத்துக் கூறி, மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory