» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீரன் வெள்ளையத்தேவன் பிறந்த நாள் விழா: தமிழக அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை!

சனி 31, மே 2025 3:16:04 PM (IST)


சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 256வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் 256வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் வல்லநாட்டில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (31.05.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தீரம் மிக்க வீரன் வெள்ளையத்தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான். பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தான். போர் தொடங்கியது. வெள்ளையத்தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றான்.

கோட்டையை பலமாக காவல் காத்தான். இவனது வீர ஆவேசத் தாக்குதலைக் கண்ட தளபதி பானர்மேன் போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்கு திரும்பினர். போர் முடிந்து விட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று தன் படைகளுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்த வெள்ளையத்தேவனை ஒரு ஆங்கிலச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டுவிட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத வெள்ளையத் தேவன் கோட்டையிலிருந்து விழுந்து மடிந்தார். வெள்ளையத்தேவனைச் சுட்டுக்கொன்றவனை அவரது மனைவி வெள்ளையம்மாள் குத்திக் கொன்றுவிட்டு வெள்ளைத்தேவனின் சாவுக்குப் பழி தீர்த்துக் கொண்டாள். 

இத்தகைய வீரமிக்க போர்படைத்தளபதியாக திகழ்ந்த வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் வீரத்தினை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு வல்லநாட்டில் ழுழுஉருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளான மே 31ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற விழாவில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், வீரன் வெள்ளையத்தேவன் வாரிசுதாரர்கள் சி.ஆறுமுகம், ஏ.மாரிமுத்து ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ.) போ.முத்துக்குமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

வரலாறுமே 31, 2025 - 08:47:49 PM | Posted IP 172.7*****

திரிக்கப்பட்டுள்ளது

கலெக்டருக்குமே 31, 2025 - 05:11:31 PM | Posted IP 172.7*****

வேறு வேலை இல்லையா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory