» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி துறைமுகத்தில் வியாபாரிகள் குவிந்தனர் : ஒரே நாளில் ரூ.30 கோடிக்கு மீன் வர்த்தகம்!

செவ்வாய் 16, ஜூன் 2026 8:24:56 AM (IST)



தமிழகக் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கடலுக்குச் சென்றனர். கரை திரும்பிய படகுகளில் மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன் இனப்பெருக்க கால தடைக்காலமாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 272 விசைப்படகுகள், வேம்பாரில் 33 படகுகள், தருவைகுளத்தில் 280 படகுகள் என மொத்தம் 585 விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாகக் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இக்காலகட்டத்தில் மீனவர்கள் தங்களது படகுகளைப் பழுதுநீக்குதல், வலைகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மொத்தம் 221 விசைப்படகுகள் ஐஸ் கட்டிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் கடலுக்குள் சென்றன. இந்த மீனவர்கள் நேற்று இரவு 8 மணி முதல் மீன்களுடன் கரைக்கு வரத் தொடங்கினர்.

கேரளா வியாபாரிகளுடன் போட்டி - ரூ.30 கோடி வர்த்தகம்:

மீனவர்களின் வலைகளில் ஊழி, விளமீன், சாளை, கீரிச்சாளை, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் பிடிபட்டிருந்தன. தற்போது கேரளப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால், அம்மாநில வியாபாரிகளும் தூத்துக்குடி விசைப்படகுத் துறைமுகத்தில் பெருமளவில் குவிந்தனர்.

குறிப்பாகத் தருவைகுளம் பகுதியில் உள்ள உள்ளூர் மீன் வியாபாரிகள், கேரள வியாபாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை ஏலம் எடுத்தனர். இதில் சுமார் 2 கிலோ எடையுள்ள மீன்கள் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், 15 கிலோ முதல் 20 கிலோ வரை எடையுள்ள பெரிய பாறை மற்றும் ஊழி மீன்கள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலும் ஏலம் போயின. சிறு வியாபாரிகள் சாளை மற்றும் சிறிய ரக ஊழி மீன்களை ஒரு கூடை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை ஏலத்தில் எடுத்தனர்.

இந்தக் காரசாரமான ஏலத்தால் நேற்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மீன்பிடித் துறைமுகப் பகுதி கடுமையான பரபரப்புடன் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் வெறும் 5 மணி நேரத்தில் சுமார் ரூ.30 கோடி வரை மீன் வர்த்தகம் நடைபெற்றிருக்கலாம் என விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் விசைப்படகு உரிமையாளர்களும், மீன்பிடித் தொழிலாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் நனைந்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆமா ஆமாJun 17, 2026 - 07:19:11 AM | Posted IP 172.7*****

அவங்க வளர்த்த மீனாம், இதில் பாதி மீனவர்கள் கடல் வளங்களை சுரண்டி ஆட்டைய போட்டு காசுக்காக மட்டும் வெளிநாட்டவருக்கு விற்று வாழ வைப்பாங்க துட்டு பயலுக.. நம்ம ஊர் ஏழைகள், பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு விற்றால் என்ன???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory