» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்கள், முகவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

வெள்ளி 1, மே 2026 12:27:16 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மே 4-ஆம் தேதி காலை 8:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேசைக்கு ஒரு முகவர் வீதம் வேட்பாளர்கள் 14 முகவர்களை நியமிக்கலாம்.

தபால் வாக்கு எண்ணுவதற்குத் தலா 7 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குத் தனியாக முகவர்களை நியமிக்கலாம். முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் நாளன்று காலை 5:30 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள்

முகவர்கள் ஒரு பேனா, வெள்ளைக் காகிதங்கள், 17-C படிவ நகல் மற்றும் சிறிய நோட்டுப் புத்தகம் ஆகியவற்றை மட்டுமே எடுத்து வர வேண்டும்.

செல்போன், கூர்மையான பொருட்கள், உணவு மற்றும் குடிநீர் எடுத்து வர அனுமதி கிடையாது.

முகவர்களுக்கான சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவை மாவட்ட நிர்வாகமே வழங்கும்.

முகவர்கள் ரெட்டியார்பட்டி சாலை வழியாக வர வேண்டும். வேட்பாளர்கள் மட்டும் பிரதான வாயில் வழியாக அனுமதிக்கப்படுவர் (வேட்பாளர்களுக்கும் செல்போன் அனுமதி இல்லை).

ஒதுக்கப்பட்ட மேசையை விட்டு முகவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது. விதிமுறைகளை மீறுவோர் உடனடியாக வெளியேற்றப்படுவர்.

வாக்கு மையத்தை விட்டு வெளியே செல்லும்போது அடையாள அட்டையைக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

தொடர்ந்து, பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 330 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சஞ்சய் சேக்கார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை சிறப்பாக நடைபெற வேட்பாளர்களும், முகவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory