» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கள்ளக்காதலை எதிர்த்தவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 29, ஏப்ரல் 2026 5:00:02 PM (IST)

காஞ்சிரக்கோடு அருகே, கள்ளக்காதலை எதிர்த்த நபரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரக்கோடு குன்னம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் அனிசன் (29/2012). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த திலகா என்ற பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 31.08.2012 அன்று, மூன்று குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணை அனிசன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் கிராம மக்கள் எதிர்த்துள்ளனர். இதனால் சுரேஷ் மீது அனிசன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மதியம், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அனிசனிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சுரேஷின் தந்தை அவரை வீட்டிற்குச் செல்லுமாறு கூறியுள்ளார். சுரேஷ் ரப்பர் தோட்டம் வழியாகத் தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற அனிசன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷின் விலா பகுதியில் குத்தியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாகத் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பரமசிவ தாஸ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவ தாஸ் இன்று தீர்ப்பளித்தார்.அதில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம். ஆபாசமாக பேசுதல் - ஒரு மாத சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம், வழிமறித்தல் - ஒரு மாத சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், உயிரிழந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி, வழக்குகளை முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதே நீதிமன்றத்தில் இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory