» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!

சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)



கன்னியாகுமாரியில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் நிலையங்களிலும் பணிபுரிந்து வருகிறார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கொள்ளையன் ஒருவன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக இவர் மீது வழக்கு நடந்து வருகிறது. 

ஏற்கனவே இவரது வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் தன்னை ஒரு வழக்கில் பொய்யாக ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சேர்த்து உள்ளதாகவும் அதில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் தான் அந்த சம்பவத்தில் இல்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அவரை விடுவித்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அன்பு பிரகாசுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் அன்பு பிரகாஷ் வழக்கில் இருந்து விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பெற்ற பிறகும் மீதி 1,15,000 தந்தால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிக்க இயலும் என்றும் இல்லை என்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்த்து விடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மேற்படி ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால் இடம் புகார் கொடுத்து உள்ளார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி உள்ளனர். அன்பு பிரகாஷ் தற்போது வெள்ளமடத்தில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் அங்கு சென்று பணத்தை தருமாறும் கூறியதால் மேற்படி புகார்தாரர் ராஜன் வெள்ளமடம் சென்று அவருடைய வீட்டில் வைத்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார். 

அப்போது லஞ்சபணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அருண் அசரியா உட்பட போலீசார் பாய்ந்து சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory