» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்

திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இனிமேல் இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் (sanitary certificate) வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவித்துள்ளார். 

பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகம், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள், என அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் சுகாதாரம் முறையாக பேணப்படுகின்றதா என்று உறுதி செய்து அரசின் சார்பில் பொது சுகாதாரத் துறையின் மூலம் சுகாதாரச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், இந்தச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதுடன், அதன் புதுப்பிப்பும் காலமுறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இனி வரும் காலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதாரச் சான்றிதழ் பெற நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சுகாதாரச் சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் வசதி தமிழ்நாடு அரசின் பொது மைய இணைய சேவை வாயிலாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இனி, அனைத்து விண்ணப்பங்களும் https://www.tnesevai.tn.gov.in என்ற அரசு அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 

நேரடியாக (OFFLINE வழியில்) தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும். சுகாதாரச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, தேவையான ஆதார ஆவணங்கள் மற்றும் சுய உறுதிமொழி (Self Declaration) சான்றிதழும் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட இந்த ஆவணங்களை மதிப்பீடு செய்த பின்னர், தகுதியானவர்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் இணையதளத்தில் (https://www.tnesevai.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும்.

இதனை விண்ணப்பதாரர்கள் நேரடியாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். சுகாதாரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள், அந்தச் சான்றிதழின் பிரதியை எடுத்துப் தங்களது நிறுவனங்களில் காட்சிப்படுத்த வேண்டியது கட்டாயம். மேலும், சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும். 

இந்த நெறிமுறைகளை மீறுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால், சுகாதாரச் சான்றிதழ் ரத்து செய்யப்படும். இனி வரும் காலங்களில் சுகாதாரச் சான்றிதழ்கள் நேரடியாக வழங்கப்படமாட்டாது. மேலும், சான்றிதழுக்கான விண்ணப்பச் செயல்முறையை எளிமைப்படுத்தவும், முழுமையான மற்றும் விரைவான சேவையை உறுதி செய்யவும், இந்த ஆன்லைன் நடைமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory