» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - ரூ.25 லட்சம் நிவாரண நிதி!

திங்கள் 16, மார்ச் 2026 5:38:50 PM (IST)



ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மீட்புப் பணியின் போது 11 மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தனர்.

கட்டாக் நகரில் செயல்பட்டு வரும் எஸ்சிபி (SCB) மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் திடீரெனத் தீப்பற்றியது. மளமளவெனப் பரவிய தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடித் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் 10 நோயாளிகள் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்தனர். நோயாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் 11 பேர் தீக்காயமடைந்தனர்.

முதல்வர் நேரில் ஆய்வு: விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், ஒடிசா மாநில முதல்வர் மோகன் மஜி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மோகன் மஜி தெரிவித்ததாவது: "இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 23 நோயாளிகள் உடனடியாக வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்திற்கான சரியான காரணம் தற்போது தெரியவில்லை; இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஒடிசா மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory