» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 21, ஜூன் 2024 3:53:23 PM (IST)
விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது; "தமிழ்நாடு அரசுக்கு ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி, நிச்சயமாக அரசு கருத்தில் கொள்ளும். எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார்.
விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மெத்தனால் கலந்து சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே உள்ள 161 மருத்துவர்களோடு கூடுதல் மருத்துவர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 66 பேர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால் ரூ.3 லட்சம் வைப்பு நிதி அளிக்கப்படும். இருவரையும் இழந்திருந்தால் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி அளிக்கப்படும். 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் தொகை அளிக்கப்படும்.
அமைச்சர்கள் மட்டுமல்லாமல் உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன்.
அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை. பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் அல்ல, நடவடிக்கை எடுத்துவிட்டு பொறுப்பை உணர்ந்து பதில் அளித்துள்ளேன். திறந்த மனதோடு இரும்பு கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)

மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!
சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

திமுக முக்கியப் பிரமுகர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் - சீமான் திடீர் சந்திப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:49:59 PM (IST)



தமிழன்Jun 21, 2024 - 06:11:58 PM | Posted IP 162.1*****