» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணாமலையின் இயக்கம் தேர்தலுக்குத் தயார் : தூத்துக்குடியில் கரு நாகராஜன் பேட்டி!

சனி 27, ஜூன் 2026 10:09:23 AM (IST)



அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ த லீடர்' இயக்கம் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக இருப்பதாகவும், வரும் காலத்தில் இது தீவிர அரசியல் கட்சியாக மாறிச் செயல்படும் என்றும் அண்ணாமலையின் பிரதிநிதி கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட 'வீ த லீடர்' இயக்கத்தின் முதல் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உமரி சத்தியசீலன் தலைமை வகித்தார். சிவமுருக ஆதித்தன், சின்ன தங்கம், ஜமீன் கிருஷ்ணன், பொன் விக்னேஷ், துர்க்கையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாதவன் மற்றும் ராஜேஷ்கனி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அண்ணாமலையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிய கரு நாகராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை சமூக சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர். தமிழகத்தில் பாஜக 18.5 சதவீத வாக்குகளைப் பெறவும், திமுகவின் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் அவர் கடுமையாக உழைத்தார். அந்த உழைப்பின் பலனைத் தற்போது முதலமைச்சர் விஜய் அறுவடை செய்துள்ளார். 

விஜய் 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்து, இன்று இளைஞர்களின் ஆதரவோடு தவெக அரசை அமைத்துள்ளார். திமுகவினரின் ஊழல் வழக்குகளின் மீது தற்போதைய தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அண்ணாமலை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட திமுக பைல்ஸ் ஆதாரங்களின் மீதான வழக்குகளை நீதிமன்றங்களில் அவரே வாதாடியும் வருகிறார்.

'வீ த லீடர்' அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வரும் ஜூலை 12ஆம் தேதி அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் போதை பழக்கத்திற்கு எதிரான கண்காட்சிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து அண்ணாமலை அமெரிக்கா மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

அண்ணா ஹசாரே பாணியில் இந்த விழிப்புணர்வு அமைப்பை அண்ணாமலை தொடங்கியுள்ளார். சமூக உதவிகள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகளுக்குப் பிறகு இந்த இயக்கம் தீவிர அதிரடி அரசியலில் ஈடுபடும். எனவே, புதிய உறுப்பினர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். விவசாயத்திற்குப் பயன்படும் ஏரி, குளங்களைச் சீரமைக்கும் பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில், பாஜக மண்டல தலைவர்கள் சாத்தான்குளம் சரவணன், ஆழ்வை கிழக்கு சிவஜோதி பாண்டியன் மற்றும் சுரபி கல்வி மற்றும் சமூகத் தொண்டு நிறுவனத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் 'வீ த லீடர்' இயக்கத்தில் இணைந்தனர். இக்கூட்டத்தில் சிவத்தையாபுரம் ஹரிகரசுதன், ஸ்ரீவைகுண்டம் பாலமுருகன், முருகேசன், வேல்முருகன், பாலக்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory