» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே: முதல்வர் விஜய் கேள்வி!

செவ்வாய் 23, ஜூன் 2026 12:01:39 PM (IST)



தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்று திமுகவினருக்கு முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடந்த ஆட்சியில் 11 மாதங்களாகச் சட்டம் - ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது சட்டம் - ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு விபரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும், பெண்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இதற்காகவே 'சிங்கப்பெண் அதிரடிப் படை' உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பரவிக் கிடப்பதற்குக் கடந்த காலங்களில் பல ஆண்டுகள் இப்பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டதே காரணம் என அவர் சாடினார். கடந்த ஆட்சியில் 11 மாத காலமாகத் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை என்றும், அப்போது நடந்த சம்பவங்களுக்குத் தற்போது தங்களது அரசு விடை கண்டுபிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தும் ஆரம்ப நிலையிலேயே இதனைக் கட்டுப்படுத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் விவகாரம் மற்றும் திமுக வெளிநடப்பு: 

முதலமைச்சர் விஜய் தனது உரையின் போது, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடித்ததாகக் குறிப்பிட்டார். இதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டதுடன், தொடர்ச்சியாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் குட்டிக்கதை:

திமுகவினர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று முதலமைச்சர் ஒரு குட்டிக்கதையைக் கூறினார். "ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருப்பதாகக் கூறி, கண்ணில் கைவைத்துத் தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, உன்னுடைய அப்பா இங்குதான் இருப்பார் என்று சொன்னார்கள், அவரைத்தான் காணோம் எனத் தேடுகிறேன்" என்று பெரியவர் கூறியதாக அந்தக் கதையை முடித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கும் நக்கல், நையாண்டியாகப் பேசத் தெரியும் என்றும், சம்பந்தமில்லாத குட்டிக்கதைகளைப் பேசத் தெரியும் என்றும், கதையை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory