» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் வாட்டும் வெயில்: பசுமைப்பந்தல் அமைக்க ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனு!

ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:05:06 PM (IST)

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி முக்கியச் சந்திப்புகளில் பசுமைப்பந்தல் அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர். முருகன், மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள போக்குவரத்துச் சிக்னல் சந்திப்புகளில், கோடை காலங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பசுமைப்பந்தல் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வரும் மே மாதம் 4-ஆம் தேதி முதல் 'அக்னி நட்சத்திரம்' (கத்திரி வெயில்) தொடங்க உள்ளது. சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மாநகரின் முக்கியப் போக்குவரத்துச் சந்திப்புகளில் நிழல் தரும் பசுமைப்பந்தல்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் விரைவில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என வாகன ஓட்டிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory