» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!

ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை என ஆசை வார்த்தை கூறி, நெல்லையைச் சேர்ந்த மருத்துவரிடம் சுமார் 14.71 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரள வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (24). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வாட்ஸ்அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், பிரபல நிறுவனத்தின் மனிதவள மேலாளர் என அறிமுகம் செய்து கொண்ட மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடியே சில ஆன்லைன் பணிகளைச் செய்வதன் மூலம் தினமும் ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் சில படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பிய கிஷோருக்கு, கைமேல் பலன் கிடைப்பது போலச் சில தொகைகளை அவரது வங்கிக் கணக்கில் மர்ம நபர் வரவு வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய கிஷோரை, டெலிகிராம் செயலியில் ஒரு கணக்கைத் தொடங்க வைத்து, அதில் அதிக முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர்.

இதனை நம்பி, டாக்டர் கிஷோர் தனது மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மொத்தம் ரூ.14,71,000 வரை பல்வேறு தவணைகளாகச் செலுத்தியுள்ளார். பெருமளவு பணத்தைச் செலுத்திய பிறகு, கிஷோரால் ரூ.12,000 மட்டுமே திரும்ப எடுக்க முடிந்தது. மீதமுள்ள பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பல லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என அந்த நபர் வற்புறுத்தியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த அகில் கிருஷ்ணா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார், அகில் கிருஷ்ணாவைக் கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். ஆன்லைன் மூலம் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory