» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : இரு குழந்தைகள் படுகாயம்!

திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)



திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியபோது, எட்டயபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் தம்பதி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூர் வெற்றி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (45). இவர் தனது மனைவி வனிதா (37), மகள் சந்தியா (15), மகன் பிரதீப் குமார் (13) மற்றும் உறவினர் வசந்தி (40) ஆகியோருடன் கடந்த 11-ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார். இன்று அதிகாலை கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, மதியம் 1 மணி அளவில் சென்னையை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரைப் பழனி (45) என்பவர் ஓட்டியுள்ளார்.

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள கோட்டூர் விலக்கு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இந்த மோதலில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டபோது பாஸ்கரன், அவரது மனைவி வனிதா, உறவினர் வசந்தி, ஓட்டுநர் பழனி ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

விபத்தில் படுகாயமடைந்த சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகிய இரு குழந்தைகளும் மீட்கப்பட்டு, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory