» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு

சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இடங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் விளக்கம் அளித்துள்ளார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கையின் படி, 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.

சரியாக பிற்பகல் 3.00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக அறைக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்தால் அவர்களுக்கு கடைசியில் வந்த நபர்களிடமிருந்து டோக்கன்கள் வழங்கப்படும். வேட்பு மனுவினை வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிபவர்களோ தாக்கல் செய்யலாம். எக்காரணத்தை முன்னிட்டும் அஞ்சல் வழியாகவோ, வேறு தனிநபர் மூலமாகவோ அனுப்பக்கூடாது. வேட்புமனு மற்றும் டிபாசிட் தொகை Online ECI Suvidha portal மூலமும் தாக்கல் செய்யலாம். இணையதளம் மூலம் மனுதாக்கல் விண்ணப்பித்தாலும், அதன் நகலினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுதாக்கலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளர்கள் வரும் போது 100 மீ சுற்றளவிற்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுலவர் அறையில் வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் (தேசிய அளவில் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அளவில்) வேட்பாளராக இருந்தால் ஒரு நபர் மட்டும் முன்மொழிந்தால் போதுமானது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளராக இருந்தால், வேட்பு மனுவினை 10 நபர்கள் முன்மொழிய வேண்டும். வேட்பாளரை முன்மொழியும் நபர்கள் வேட்பாளர் போட்டியிடும் அதே சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

224-திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருநெல்வேலி கோட்டாட்சியர் .பிரியா அவர்களிடம் திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 225-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, அவர்களிடம் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் 226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மரு.மோனிகா ராணா, அவர்களிடம் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்திலும், 227-நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் .சிந்து அவர்களிடம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 228-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .ராஜசெல்வி அவர்களிடம் இராதாபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தேர்தல் விதிமுறைகள் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளிலுள்ள அலுவலர்களையோ தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory