» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தர மாட்டோம் : சீமான் பிரச்சாரம்!

வியாழன் 26, மார்ச் 2026 4:39:58 PM (IST)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்சி, கிரைண்டர், டிவி அல்லது பணம் தருவதாகப் பொய் வாக்குறுதி அளிக்க மாட்டோம். அந்தப் பொருட்களை நீங்களே வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்துவோம் என்று சீமான் பேசினார். 

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதின் முக்கிய அம்சங்கள்: "கர்நாடக முதல்வர் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்கிறார். ஆனால், தமிழக முதல்வர் அந்நாட்டிற்குச் சென்று காங்கிரஸ் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்கிறார். கட்சித் தலைவராகச் செல்வதில் தவறில்லை, ஆனால் தமிழக முதல்வர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு அங்கு செல்வது எந்த விதத்தில் நியாயம்? தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸிற்கு 28 இடங்களையும், ராஜ்யசபா இடத்தையும் வாரி வழங்கியுள்ளனர்."

"கச்சத்தீவு, காவிரி நீர், முல்லைப் பெரியாறு என அனைத்து உரிமைகளையும் நாம் இழந்து நிற்கிறோம். அன்று கருணாநிதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வழக்கை வாபஸ் பெற்றதால், இன்று 500 டி.எம்.சி-க்கு பதிலாக 150 டி.எம்.சி-க்காகக் கையேந்தி நிற்கிறோம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், கடல் நீரைத் தடுத்து ஏரி, குளங்களை நிரப்பி, 'தண்ணீர் தற்சார்புத் திட்டத்தை' அமல்படுத்துவோம். இனி யாரிடமும் தண்ணீர் கேட்டு நிற்கும் நிலை இருக்காது."

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்சி, கிரைண்டர், டிவி அல்லது பணம் தருவதாகப் பொய் வாக்குறுதி அளிக்க மாட்டோம். அந்தப் பொருட்களை நீங்களே வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்துவோம். ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகளை மூடுவேன். அதற்கு மாற்றாகக் கள் இறக்க அனுமதி அளித்து பனை பால், தென்னை பால், ஈச்சம்பால் போன்ற இயற்கை பானங்களை ஊக்குவிப்போம்."

"குறைந்த வாக்கு சதவீதம் வைத்திருப்பவர்கள் எல்லாம் கூட்டணிக்குப் பேரம் பேசுகிறார்கள். ஆனால், 8.5% வாக்குகளைத் தனித்து நின்று பெற்றுள்ளோம். பதவிக்கோ, பணத்திற்கோ நாங்கள் வரவில்லை; தமிழினத்தின் முன்னேற்றத்திற்காக வந்துள்ளோம். அதிமுக, திமுக வெல்வது சாதாரண நிகழ்வு, ஆனால் நாம் தமிழர் கட்சி வெல்வது சரித்திரப் புரட்சியாக அமையும்."

போலீஸாருடன் வாக்குவாதம்

பிரச்சாரத்தின் போது சீமானின் வாகனம் மற்றும் ஒளிப்பதிவு வாகனம் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த மேச்சேரி காவல் ஆய்வாளர் மகேந்திரன், வாகனங்களை ஓரமாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதனால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் சீமான் பிரச்சாரத்தைத் தொடங்கியதை அடுத்து, தொண்டர்கள் சமாதானமடைந்து அவரது பேச்சைக் கவனிக்கத் தொடங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory