» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக ஆட்சி அமைந்தால் குடும்பத்திற்கு ரூ.10,000 நிதியுதவி: எடப்பாடி பழனிசாமி அதிரடி வாக்குறுதி

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:33:13 PM (IST)

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. குடும்பங்களுக்குக் கருணைத் தொகை: தற்போதைய ஆட்சியில் உயர்ந்துள்ள விலைவாசி மற்றும் வரி விதிப்பால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனைப் போக்கும் வகையில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 10,000 கருணைத் தொகை வழங்கப்படும்.

2. வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகையாக வழங்கப்படும். அதேபோல், 12-ஆம் வகுப்பு வரை படித்து வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்.

3. மீனவர் நலன்: மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ. 8,000-லிருந்து ரூ. 10,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

4. பொங்கல் பரிசு: ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ரூ. 1,000 ரொக்கம் வழங்கப்படும்.

5. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்: கைத்தறி நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.

விசைத்தறி நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டிலிருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.

6. சிறுவணிகர் கடன் தள்ளுபடி: நகர்ப்பகுதிகளில் உள்ள நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

"மாநிலத்தின் வருவாயைப் பெருக்கி, நாங்கள் அறிவித்துள்ள அனைத்து நலத்திட்ட உதவிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும்" என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory