» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொடூரக் கொலை: கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்

ஞாயிறு 18, ஜனவரி 2026 9:26:09 AM (IST)

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் இடிப்பது போல வந்ததை தட்டிக்கேட்டதால் வங்கி ஊழியர் உள்பட 2 பேரை கஞ்சா போதை ஆசாமிகள் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (36), கேசவன் என்கிற கேசவமூர்த்தி (25) ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், புத்தூர் அருகே உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து விட்டு 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்றுகொண்டிருந்தபோது அதே வழியாக கஞ்சா போதையில் 4 வாலிபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்தனர். கஞ்சா ஆசாமிகள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றதால் பார்த்திபன், சுகுமார் இருவரும் ஏன் இடிப்பது போல் வேகமாக வருகிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் அந்த 4 பேரும் சேர்ந்து பார்த்திபன், சுகுமார் மற்றும் கேசவமூர்த்தியை சரமாரியாக தாக்கி சாலையோரம் கிடந்த பெரிய கற்களால் 3 பேரின் தலையிலும் மாறிமாறி எறிந்தனர். இந்த கொடூர தாக்குதல் நடுரோட்டில் நடந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் இதை தடுக்காமல் சென்றனர்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொடூர தாக்குதலில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சுகுமார், கேசவமூர்த்தி இருவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.

சாலைமறியல்

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மணவாளநகர் போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பார்த்திபன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுகுமார் உயிரிழந்தார். கேசவமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உயிரிழந்த பார்த்திபன் மற்றும் சுகுமார் ஆகியோரின் உறவினர்கள் நேற்று மணவாள நகர் ஒண்டிக்குப்பம் விநாயகர் கோவில் அருகே நெடுஞ்சாலையில் அமர்ந்து கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் புரண்டு கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கியது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலைமறியலால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொலை தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மணவாளநகர், ஒண்டிகுப்பம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மது மற்றும் கஞ்சா போதையில் வாலிபர்கள் அடிக்கடி இதுபோன்ற ரகளையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளதாக தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் இடிப்பது போல வந்ததை தட்டிக்கேட்ட 2 பேரை கஞ்சா போதை ஆசாமிகள் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கை, கால் முறிந்தது

இரட்டை கொலை குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலையில் தொடர்புடையவர்கள் மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (30), ஜோதிஷ் (34), வினோத்குமார் (37), ஜவகர் (23) என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த 4 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ஜவஹருக்கு கை முறிந்தது. நீலகண்டனுக்கு கால் முறிந்தது. 2 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory