» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை ஏற அனுமதிக்கும்படி போராடிய உள்ளூர்காரர்கள் 28 பேர் கைது

திங்கள் 22, டிசம்பர் 2025 8:11:43 AM (IST)



சந்தனக்கூடு விழாவுக்கு முஸ்லிம்கள் செல்லும் நிலையில் திருப்பரங்குன்றம் மலை ஏற அனுமதிக்கும்படி போராடிய உள்ளூர்காரர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளையும் போலீசார் பஸ்சில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்பேரில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக மலையில் ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற 6-ந்தேதி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடந்தது. இதற்காக தர்கா தரப்பினர் மலை மீது ஏறிச்சென்று உரிய பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலைக்கு மேலே செல்லக்கூடிய பிரதான பாதையான பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பூர்வீக குடியிருப்பு பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுடன் நேற்று மதியம் 1.35 மணி அளவில் திரண்டனர். அதில் ஒரு பெண் தனது கையில் அகல்விளக்கு ஏந்தியபடி வந்தார். பின்னர் அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: கார்த்திகை திருநாள் முதலில் வந்தது. அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக ஐகோர்ட்டு உத்தரவும் முதலில் வந்தது. ஐகோர்ட்டு உத்தரவிட்டும் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட யாரும் மலையின் மீது ஏறிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சந்தனக்கூடு திருவிழாவுக்காக முஸ்லிம்கள் மட்டும் மலை மீது ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுவது ஏன்?

இதில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்? எனவே, மலைக்கு செல்ல எங்களையும் அனுமதியுங்கள். இல்லை என்றால் மலை மீது செல்ல முஸ்லிம்களையும் அனுமதிக்க மாட்டோம். மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் ஏற்றுவோம்... ஏற்றுவோம்... திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்... என்று கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அரசு பஸ்சில் ஏற்றிச்சென்று திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். குழந்தைகளையும் போலீசார் பஸ்சில் ஏற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory