» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேவையான அளவிற்கு கடன் வாங்கி, உரிய நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும்: ஆட்சியர் பேச்சு

வெள்ளி 17, அக்டோபர் 2025 3:47:07 PM (IST)



தேவையான அளவிற்கு கடன் வாங்கி, அதனை சரியாக உரிய நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது புதிய கிளை திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம், தெய்வசெயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி கிராமத்தில் இன்று தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது புதிய கிளையினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது : தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது கிளை நமது மாவட்டத்தின் தெய்வசெயல்புரம் பகுதியில் இன்றையதினம் துவங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கிராம வங்கியானது நமது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப் பகுதிகளில் வங்கிச் சேவையை ஆற்றி வருகிறது. இரண்டாவது பெரிய வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியின் சேவையானது சிறு கிராமங்களிலும் சென்றடைவதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். 

குறிப்பாக, மண்டல ஊரக வங்கி என்று குறிப்பிடக்கூடிய இந்த வங்கியின் நோக்கம், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், ஏழை எளியவர்களுக்கு வங்கி சேவை, வங்கி கடன் வசதி, நிதி சேவைகளை செய்து கொடுப்பதாகும். நமது மாநிலத்தில் இரண்டு வங்கிகளான பாண்டியன் கிராம வங்கி மற்றும் பல்லவன் கிராம வங்கி ஆகிய வங்கிகளை ஒன்றிணைத்து, தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. 

இவ்வங்கியின் தலைமையிடம் சேலம் ஆகும். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 676 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. இன்றையதினம் 677ஆவது வங்கி தெய்வசெயல்புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் வங்கியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

வங்கிகளுக்கிடையே அதிகமான கடன் வழங்குவதிலும், அதிகமாக வைப்பு தொகை வைப்பதில் சிறு போட்டி ஏற்படும். அதிகமான டெபாசிட் வாங்குபவர்களுக்கு போட்டி இருக்கும். அதே மாதிரி அதிகமான கடன் வழங்குவதிலும் போட்டி ஏற்படும். அதிகமாக கிளைகளைக் கொண்டிருக்கக் கூடிய வங்கி, அதிகமாக டெபாசிட் பெறுகின்றது. ஆனால் அதிகமாக கடன்களை நமது ஊருக்கு வழங்கவில்லை என்பது சென்ற ஆண்டறிக்கையில் தெரிய வந்தது. 

நகைக் கடன் மற்றும் அது சார்ந்த கடன்கள், சிறிய கடன்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கக்கூடிய கடன் உள்ளிட்ட அனைத்து கடனுதவிகளிலும் எல்லாரும் பயன்பெற வேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறேன். அரசு துறையிலும், பணங்களை டெபாசிட் செய்வதற்கு கோரிக்கை வைக்கிறீர்கள். அதே அளவுக்கு நீங்களும் ஒவ்வொரு மக்களுக்கும் அதிகமான மற்றும் எளிமையான கடன்களை வழங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். 

சிறு கிராமங்களில் உள்ள புதிய பயனாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளருக்கும் வங்கி சேவையை வழங்கி உதவி செய்ய வேண்டும். இந்த ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்காகவும் அதை நோக்கி செல்ல வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு, வங்கி சேவை வழியாக நிதியை பெறுவதற்கும், அதில் இருக்கக்கூடிய பாதுகாப்பை பற்றியும், கடன்கள் வழங்குவதற்கும் அதன் வட்டி விகிதம் ஆகியவை குறித்து இந்திய ரிசர்வ் வங்கியினுடைய பரிந்துரைக்கப்பட்ட அளவில் நியாயமாகவும், உங்களுக்கு ஏற்ற வழியிலும் வழங்குவார்கள். 

மற்றவைகளிலிருந்து கடன்கள் பெறுவதை தவிர்த்து, இதுபோன்ற வங்கிச் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வங்கி சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதன் முக்கிய நோக்கம், வங்கிகள் கொடுக்கக்கூடிய கடன்களை பெறுவது மட்டுமல்லாது, உரிய நேரத்தில் கடன்களை மீண்டும் திரும்ப செலுத்துவதாகும். அதை திரும்ப செலுத்தினால் மட்டும்தான் அவர்களால் உங்களுக்கு மீண்டும் கடன்கள் வழங்க இயலும். 

எனவே, அந்த பொறுப்பையும் நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மென்மேலும் இந்த வங்கி நல்லபடியாக செயல்படுவதற்கு, நீங்கள் எல்லாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வங்கி கடனுள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய பணப் பரிமாற்றத்தை வைத்து சென்ட்ரலைஸ்டு சிஸ்டம் ஆப் சிபில் ஸ்கோர் என்று ஒரு மாதிரியான டிரைவ் வைத்து, எங்கெங்கெல்லாம் கடன் வாங்கியிருக்கோம், இந்தக் கடன்கள் எல்லாம் எவ்வாறு திருப்பிச் செலுத்துகின்றோம் என்பதற்கான நடைமுறைகளை எல்லாம் வங்கிகளுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கிறது.

எனவே, தேவையான அளவிற்கு கடன் வாங்கி, அதனை சரியாக உரிய நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும். இந்த வங்கி வழங்கக்கூடிய சேவைகளை நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த வங்கி உங்களுக்கு நல்ல சேவைகளை வழங்கும். இந்த வங்கி வளர்வது, வங்கியின் வளர்ச்சிக்கு ஒரு உதவியாக இருக்கும். எனவே நீங்கள் எல்லாரும் நல்ல ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த வங்கி சிறந்த வங்கியாக மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளர்கள் கண்ணன் பொன்னுராமன், குமார், வட்டார மேலாளர் சுதர்சன், கிளை மேலாளர் சந்தானசெல்வம், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory