» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் கல்லூரியில் பாலியல் தொல்லை புகார்: பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் 4 பேர் கைது!
சனி 11, அக்டோபர் 2025 10:25:46 AM (IST)
சேரன்மாதேவியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பேராசிரியரை தாக்கிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ஸ்காட் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ என்ற பெயரில் இந்த கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகள் பேராசிரியர் ஒருவரின் தலைமையில் சில இடங்களுக்கு சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது அந்த பேராசிரியர், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா முடிந்து கல்லூரிக்கு வந்ததும், மாணவி இதுகுறித்து சக மாணவிகளிடம் கூறியுள்ளார். இந்த தகவல் கல்லூரி முழுவதும் பரவிய நிலையில், நேற்று முன்தினம் மாணவர்கள் சிலர் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவரை மாணவர்கள் கும்பலாக சேர்ந்து சரமாரி தாக்கினர். தகவலறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் விரைந்து சென்றனர். விசாரணைக்காக 4 மாணவர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணை முடிவில் பேராசிரியரை தாக்கியதாக 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவர்களை கைது செய்தனர்.
மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று காலையில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் போலீசார் நேற்று மாலையில் சேரன்மாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் நீதிமன்றத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களின் மகன்களை கைது செய்தது ஏன்? எனக்கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
