» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:19:25 AM (IST)

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் "பல குரல் கலையில் ஆர்வம் காட்டி, தலைசிறந்த நகைச்சுவை கலைஞராக உயர்ந்த ரோபோ சங்கர் (46) நேற்று (18.09.2025) இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

மதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ரோபோ சங்கர், கல்லூரிக் கல்வி பெற்ற காலத்தில் பல குரலில் பேசி அசத்தி வந்தவர். இவரது கிராமிய நடனம் பரவலான ரசிகர்களை பெற்றுள்ளது. விஜய் தொலைகாட்சியில் கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்வின் மூலம் இவரது நகைச்சுவை திறன் வெளிப்பட்டது. தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் "ரௌத்திரம்" திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு சென்றவர்.

முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது கலைப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்தது போல், நல்ல நிலைக்கு உயர்ந்து கொண்டிருந்த வேளையில் ரோபோவின் மறைவு பேரிழப்பாகும். அவருக்கு பிரியங்கா என்ற வாழ்விணையரும், இந்தர்ராஜா என்ற மகளும் இருக்கின்றனர்.

ரோபோ சங்கரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory