» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நவ.2ம் தேதி தொடங்குகிறது
வியாழன் 31, அக்டோபர் 2024 3:55:15 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (நவ.2ம் தேதி) சனிக்கிழமை தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் கிரிப்பிரகார வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் சுவாமியும், அம்பாள்களும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ம் திருநாளான 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
விழா நாட்களில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்ளும் வகையில் 18 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடற்கரை பகுதியில் ஆங்காங்ேக போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ளனர். கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்ட்டு உள்ளன.
கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் தடுப்பு மிதவைகள் மிதக்கவிடப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல்: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்!
புதன் 18, பிப்ரவரி 2026 3:41:47 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)

ஆட்சியில் பங்கு என்பது குறித்து தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்: மாணிக்கம் தாகூர்
புதன் 18, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)

