» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் ஆய்வு!

சனி 20, ஜூன் 2026 12:48:36 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம், நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு நுள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திடீர் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- "கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து, அதற்கான மருந்துகளை வழங்கிட மாவட்ட சுகாதார அலுவலர், உதவி இயக்குநர் ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று மேல்நிலைத் தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள், டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகளில் உள்ளிட்டவைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிப்பதோடு, வீட்டில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தண்ணீரை மூடி வைக்காமலும், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் அலட்சியமாக வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்ளாமல், உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்கள் சரிவர பணியை மேற்கொள்ளவில்லை என்றால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மு.பிரதாப், தெரிவித்தார்.

ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory