» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)



முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் மிக விமர்சையாகத் தொடங்குகிறது. 

12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்காக, வரும் 21-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, காலை 5:00 மணி முதல் 5:30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். பின்னர் கொடி மரத்திற்குப் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டு, மற்ற கால பூஜைகள் தொடரும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5-ஆம் திருநாள், வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு 7:30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து 7-ஆம் திருநாளான 27-ஆம் தேதி, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்வார். அன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் 'சிவப்பு சாத்தி' கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்.

விழாவின் 8-ஆம் திருநாள் அதிகாலை, சுவாமி சண்முகர் வெள்ளிச் சப்பரத்தில் 'வெள்ளை சாத்தி' கோலத்தில் வீதி உலா வருவார். அதனைத் தொடர்ந்து, அன்று பகல் 10:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் 'பச்சை சாத்தி' கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ஆம் திருநாள் தேரோட்டம், மார்ச் 2-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். 

11-ஆம் திருநாளான மார்ச் 3-ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு மேல் சுவாமியும் அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வரும் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory