» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டக் கல்லூரிகளில் ரூ.11 கோடியில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா!

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:43:44 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டக் கல்லூரிகளில் ரூ.11 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் காணொலி காட்சி வாயிலாக நாட்டினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி வருகிறார். உலகத் தரத்திலான கல்விக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலக வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது:

கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ₹3.25 கோடி மதிப்பில் 9,602 சதுர அடி பரப்பளவில், மூன்று தளங்களுடன் கூடிய 6 புதிய வகுப்பறைகள், நாகர்கோவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ₹1.74 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் கூடிய 6 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள், பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ₹6 கோடி மதிப்பில் 11 புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது..

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "புதிய கட்டுமானப் பணிகளைத் தரமாகவும், உறுதித்தன்மையுடனும் மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்" என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுசீலாபாய், நாகர்கோவில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மண்டலத் தலைவர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சரவணன், முன்னாள் உறுப்பினர் பூதலிங்க பிள்ளை மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory