» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பழங்குடியினர் நல உண்டு உறைவிட மாணவர் விடுதி : அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்

வெள்ளி 6, ஜூன் 2025 5:50:21 PM (IST)



திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணலோடை பழங்குடியினர் நல உண்டு உறைவிட அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் விடுதியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணலோடை பழங்குடியினர் நல உண்டு உறைவிட அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் விடுதியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (06.06.2025) திறந்து வைத்து, மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, தெரிவிக்கையில் -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் மீது மிகுந்த பற்று கொண்டு அவர்களை சமுதாயத்தில் சிறந்த குடிமக்களாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கென பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். 

குறிப்பாக மலைவாழ் பழங்குடியின மாணவ மாணவியர்கள் பள்ளிப்படிப்புடன் நின்று விடாமல் உயர் கல்வி பயின்று வாழ்வில் மேம்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பழங்குடியின மக்கள் கல்வி வளர்ச்சி பெறும் வகையில் மணலோடையில் பழங்குடி நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியானது 01.05.1962-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளி 15.10.1993 அன்று நடுநிலைப் பள்ளியாக அங்கீகாரம் பெற்று, 08.02.2021 அன்று உயர்நிலைப் பள்ளியாக அங்கீகாரம் பெற்றது. 

இப்பள்ளி கடந்த 63 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய நல் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் வலியமலை, புறாவிளைமலை, வில்லுசாரிமலை, ஆலம்பாறை, படும்பாறைமலைவாழ் கிராமங்களுக்குட்பட்ட 51 மாணவர்கள் 61 மாணவிகள் என மொத்தம் 112 மாணவ மாணவியர்கள் இக்கல்வியாண்டில் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி விடுதியில் 43 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட மாணவர் விடுதியானது தமிழக அரசின் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 24- இன் கீழ் ரூபாய் 42.55 இலட்சம் செலவில் முழுமையாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வியில் சிறந்தவர்களாக விளங்குவதோடு தங்களது சமுதாயத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவிகள், விடுதி வசதிகள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வெளிநாட்டுக்கு சென்று படிப்பதற்கான ஊக்க தொகைகள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறார்கள். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்கள் அனைவரும் சிறப்பான முறையில் கல்வி பெற்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, திருவட்டார் வட்டாட்சியர் கந்தசாமி, செயற்பொறியாளர் ஹரிஹர சுப்பிரமணியன், அரசு வழங்கறிஞர் ஜாண்சன், மணலோடை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீலேகா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) ஸ்ரீகுமார், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory