» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பருவமழையை எதிர்கொள்ள விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

வெள்ளி 6, ஜூன் 2025 4:58:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள தோட்டக்கலை  விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டமானது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை ஆகிய இரண்டையும் ஒருங்கே கிடைக்கப்பெறும் மாவட்டமாகும். தற்போது தென்மேற்கு காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். 

தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு / விதைப்பு பணிகளை மேற்கொள்ளல், வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து செடிகள் சாயா வண்ணம் பாதுகாத்தல், மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுத்தல், மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பல்லாண்டு பழப் பயிர்களான மா, கொய்யா, மாதுளை ஆகியவற்றில் கவாத்து செய்து நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும்.

பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்லமிளகு, ஜாதிக்காய், கிராம்பு முதலியவற்றில் உரிய வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க டிரைகோடெர்மாவிரிடி நிலத்தில் தெளிக்க வேண்டும். கிராம்பு மற்றும் ஜாதிக்காய் பயிர்களில் நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

கோகோ, ரப்பர் பயிர்களில் சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்க குச்சிகளால் கட்ட வேண்டும். கோகோ பயிரில் அதிகப்படியான இலைத்தளைகளை கவாத்து செய்தல், மரத்தின் தண்டுப் பகுதியில் போர்டோக் கலவையை பூச வேண்டும். ரப்பர் பயிரில் செடியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்து சாய்வு அமைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். ரப்பர் பால் வடிக்கு பகுதியில் பாதுகாப்பு பூச்சு பூச வேண்டும். மேலும் அதில் மழைப் பாதுகாப்பு கவசம் (Rain guard) பயன்படுத்த வேண்டும்.

வாழைப் பயிரை பொறுத்தமட்டில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு / யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரத்தை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். மேலும் 75% க்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். மரவள்ளி பயிருக்கு உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். செடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.

பந்தல் காய்கறிகள் மற்றும் பூ பயிர்களுக்கு உரிய வடிகால் வசதி செய்தல், நோய்தடுப்பு மருந்துகள் தெளித்தல், காய்ந்த இலைகளை அகற்றுதல் முதலியவற்றை கடைப்பிடித்தல் வேண்டும். எனவே கன்னியாகுமரி மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொண்டு தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory