» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:48:03 PM (IST)
"பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தால், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்" என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வி யடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.
பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் இனியாவது உணர வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சனி 4, ஏப்ரல் 2026 5:16:41 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)

