» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதம்: விவாதிக்க விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:25:23 PM (IST)
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் தொடர்பாக சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என குமரி எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரயில்வே பணிகளுக்கென தமிழ்நாட்டிற்கு 6626 கோடி ரூபாயினை மத்திய அரசு ஒதுக்கிய போதிலும் அது தமிழ்நாட்டில் எந்த ரயில்வே திட்டத்திற்கும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என கூறி, இதை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தார்.
மத்திய அரசு போதிய நிதியினை ஒதுக்கிய போதிலும், தமிழகத்தில் ரயில்வே உட்கட்டமைப்பு பணிகள் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ரயில் பயணிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு வளர்ச்சி பணிகளை முடுக்கி விட வேண்டும்.
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை மத்திய அரசு தாமதபடுத்தி வருகிறது. வளரும் தேவைகளுக்கு ஏற்ற வேகத்தில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. அரசியல் மற்றும் அதிகாரிகளின் தடைகளை மீறி தமிழ்நாட்டிற்க்கான ரயில்வே திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 10 புதிய வேக ரயில்கள் அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயம். ஆனால் இது மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே செயல்படுத்தபடுகிறது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் கோரிக்கை. அதுவும் கண்டு கொள்ளப்படவில்லை.
திருவனந்தபுரம் - நெல்லை இடையே மெமு (MEMU) ரயில்களை கூடுதலாக இயக்கி தினமும் இந்த மார்க்கத்தில் பயணம் செய்யும் பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சென்னை - கன்னியாகுமரி இடையேயான ரயில்பாதையில் உள்ள வேக கட்டுப்பாடு காரணமாக ரயில்களை வேகமாக இயக்க இயலாமல் ரயில்வே நிர்வாகம் உள்ளது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் "கவச்” கருவிகள் அங்கீகரிக்கபட்ட 1460 கிலோ மீட்டர் தூரத்தில் வெறும் 600 கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி போன்ற ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகிறது.
535 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டண சலுகை, இந்த அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதை மீண்டும் தொடங்கி முதியோர்களின் அல்லலை போக்க வேண்டும். இத்தகைய மிக முக்கியமான மக்கள் தேவைகள் குறித்து விவாதிக்க சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.