» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நீதிமன்றம் தடை உத்தரவு : திற்பரப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை தடுத்து நிறுத்திய போலீசார்!

சனி 19, அக்டோபர் 2024 11:29:53 AM (IST)



திற்பரப்பு அருவியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் பணி மேற்பார்வையாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.4.31 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நடைபெற்று வந்தது. இந்த பணிகளின் போது சுற்றுலாத் துறைக்கும், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களும் போதிய கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் பணிகள் முடங்கிய நிலையில் இருந்தன. 

பின்னர் மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு செய்து பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையே அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறை நிலத்தையொட்டி தனியாருக்கு நிலம் உள்ள நிலையில் எல்கைப் பிரச்சினை ஏற்பட்டு மீண்டும் பணிகள் முடங்கின. இதைத் தொடர்ந்து எல்லை பிரச்சினையும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 6-ந் தேதி முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் அருவியைப் பகுதியை ஒட்டி நிலம் உள்ள தனி நபர் ஒருவர் தனது நிலத்திற்கு செல்லும் பாதையை சுற்றுலாத் துறையினர் மூடியுள்ளனர் என்று கூறி பத்மநாபபுரம் கோர்ட்டில் இருந்து பணிகள் நிறுத்தவற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளார். நேற்று காலையில் அருவிப் பகுதியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தடை உத்தரவு பெற்ற அந்த நபரும், அருமனை போலீசாரும், வக்கீல் ஒருவரும் வந்து பணிகளை நிறுத்தமாறு கூறினர். எனினும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் மாலையில் மீண்டும் வந்த அருமனை போலீசார், அருவிப் பகுதியில் பணிகளை தடுத்து நிறுத்தினர். அத்துடன் பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஒப்பந்தகாரரின் மேற்பார்வையாளரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி கூறும்போது, ‘திற்பரப்பு அருவியில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள் எதுவும் தனியார் நிலத்தில் செய்யப்படவில்லை. அருவிப்பகுதியில் பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட நிலத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. பணி தலத்தில் பணி மேற்பார்வை செய்து கொண்டிருந்தவரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory