» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வர்த்தக தடை மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்

ஞாயிறு 1, ஜூன் 2025 10:42:16 AM (IST)

வர்த்தக தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழவிருந்த அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தி இந்தியா பதிலடி கொடுத்தது.

இதனை தொடர்ந்து இருநாட்டின் ராணுவங்களும் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை அனுப்பியும் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த போர் தாக்குதல் அதிரடியாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால் இருநாடுகள் பேச்சுவார்த்தையில் எந்த நாடுகளும் தலையிடவில்லை என இந்தியா தரப்பில் தொடர்ந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை நிறுத்தியதற்கு முழு புகழும் தன்னையே சாரும் என டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள இரும்பாலைக்கு நேரில் சென்று டிரம்ப் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நடந்த போர் தாக்குதலை தான் நிறுத்தியதற்கு பெருமை அடைவதாக தெரிவித்தார்.

"அவர்கள் (இந்தியா-பாகிஸ்தான்) துப்பாக்கிகள், குண்டுகள் பொழிந்து போரில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படும் அபாயம் நிலவியது. ஆனால் நான் பொருளாதார ரீதியாக அவர்களுடன் போரிட உள்ளதாக அச்சுறுத்தினேன்.

அதாவது இருநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என பகிரங்க மிரட்டல் விடுத்தேன். இதனால் அவர்கள் பணிந்து போரை கைவிட்டனர். வழக்கமாக தோட்டாக்கள் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ஆனால் நான் வர்த்தகம் மூலம் போர் நிறுத்தம் மேற்கொண்டேன். இதுகுறித்து யாரும் வாய்திறக்க மாட்டார்கள். தற்போது இருநாடுகளிலும் அமைதி நிலவுகிறது” என்று அவர் கூறினார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் டிரம்பின் பங்கை இந்தியா மறுத்து வரும்நிலையில் அவர் மீண்டும் மீண்டும் இவ்வாறு கூறுவது மத்திய அரசவையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

டேய் டிரம்ப்Jun 2, 2025 - 12:06:14 PM | Posted IP 104.2*****

ஓரமா போய் விளையாடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory