» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:36:38 AM (IST)

JarkhandProtest.jpg

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்துச் சட்டமன்றத்தை நோக்கி பேரணி சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்ததால் அம்மாநிலத் தலைநகர் ராஞ்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுவோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:

ஏற்கனவே நடத்தப்பட்ட சுமார் 13 தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (JPSC) வெளிப்படையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது சி.பி.ஐ. தலைமையில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தித் தலைநகர் ராஞ்சியில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புகள் மற்றும் தேர்வு ஆர்வலர்கள் இணைந்து 17 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை:

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் மாநில அரசு பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. மாணவர்கள் 13 தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்திய நிலையில், அரசு 3 தேர்வுகளை மட்டுமே ரத்து செய்ய ஒப்புக் கொண்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்துத் தடைகளை மீறிப் பழைய சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து சபாநாயகர் அலுவலகம் அமைந்துள்ள புதிய சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.

போர்க்களமான சட்டமன்ற வளாகம்:

போராட்டத்தைக் கட்டுப்படுத்தச் சட்டமன்றத்தைச் சுற்றியுள்ள 4 கி.மீ. பரப்பளவில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 1,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அதிிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் தடுப்புகளைத் தாண்டிச் சட்டமன்றத்திற்கு 200 மீட்டர் தொலைவில் மாணவர்கள் முன்னேறியபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழ்நிலையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கலைத்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது என மாணவர் அமைப்புகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

முன்னாள் தலைவா் கைது:

மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்வு முறைகேடு தொடர்பாகச் சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் கியாங்டே என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் சமீபத்தில்தான் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து இம்முறைகேடு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory