» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்: பிரதமர் மோடி, முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்!
ஞாயிறு 12, ஜூலை 2026 12:05:10 PM (IST)

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று புகழப்பட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88) உடல்நலக் குறைவு காரணமாக மைசூருவில் காலமானார்.
இந்தியச் சினிமாவில் பழம்பெரும் பாடகியாகத் திகழ்ந்த எஸ்.ஜானகி, 'ஜானகியம்மா', 'கான கோகிலா', 'இசை அரசி' எனப் பல்வேறு பட்டங்களுடன் இந்திய சினிமா முழுமைக்கும் அறியப்பட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் பல்வேறு மொழிகளில் சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகளையும், 33 மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி, மைசூருவில் உள்ள போகாடி பகுதியில் பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு சார்ந்த உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை அதிகாலை மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலையில் சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக எஸ்.ஜானகி உடல் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் இன்று வைக்கப்படுகிறது. அதன்பின்னர், பிற்பகல் 3 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. பாடகியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல், திரைத்துறைப் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் இரங்கல்
எஸ். ஜானகியின் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ். ஜானகி. பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இந்திய இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். எஸ். ஜானகியின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரிவினைவாதிகளைப் புகழ்ந்து புத்தகம் வெளியீடு: 3 பதிப்பாளர்கள் அதிரடி கைது!
திங்கள் 13, ஜூலை 2026 12:07:20 PM (IST)

ராமர் கோவிலில் கொள்ளையடித்தவர்களைத் தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால் உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:47:18 AM (IST)

அரசு விழாக்களில் இனி மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு!
சனி 11, ஜூலை 2026 3:40:12 PM (IST)

பாலியல் புகார் அளித்த சிறுமி உட்பட 6 பேர் கொடூர கொலை: போக்சோ குற்றவாளி வெறிச்செயல்!
சனி 11, ஜூலை 2026 11:41:29 AM (IST)

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்: மக்களின் விபரீத செயலுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 8:52:22 AM (IST)

ரேஷன் கடைகளில் இனி உயர்தர அரிசி: குருணை அளவை குறைக்க மத்திய அரசு ஒப்புதல்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:31:55 AM (IST)


