» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடும் போர் சூழலிலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை: பிரதமர் உறுதி!

செவ்வாய் 24, மார்ச் 2026 5:23:08 PM (IST)

மேற்கு ஆசிய போரால் வணிக ரீதியாக கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளபோதிலும், நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு ஆசிய போர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 'மேற்கு ஆசியாவில் நிலவிவரும் பதற்றமான சூழல் குறித்து அரசு விழிப்புடன் உள்ளது. போரின் விளைவுகள் நாட்டு மக்களை பாதிக்காத வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு ஆசியாவில் நேர்ந்துவரும் போர் நம் அனைவரையும் பாதித்துள்ளது. இந்த போரில் அரசின் நிலைப்பாடு குறித்து அவை முன்பும் மக்கள் முன்பும் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் உலகில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வணிக வழித்தடங்களை இப்போர் கடுமையாக பாதித்துள்ளது. 

இந்த வழித்தடத்தில் கிடைக்கக்கூடிய எரிபொருள், டீசல், பெட்ரோல், உரங்கள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்பாடு செய்யும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இதனுடன், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சுத்திகரிப்பு திறனும் அதிகரித்துள்ளது. 

இந்தியாவிடம் தேவையான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. தடையற்ற விநியோக ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கப்பல்கள் கட்டுமானத்திற்காக ரூ. 70,000 கோடி மதிப்புடைய திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடும் சவாலானதாக மாறியுள்ளது. இத்தகைய பாதகமான சூழலிலும் பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூகமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

போரை நிறுத்துவதும், மீண்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதையும் நோக்கமாகக் கொண்டு அதற்குத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அனைத்துத் தரப்பினரிடமும் இந்த நோக்கத்தை அரசு வலியுறுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.

மேற்கு ஆசிய போர் குறித்து மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, போரால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory