» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!

வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)



மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது, இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, கடந்த பிப்ரவரி 3-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அப்போது அவையில் காகிதங்களைக் கிழித்து எறிந்ததாகக் கூறி, விதிகளை மீறியதற்காக 8 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார். இதில் அவையைச் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கோரப்பட்டதுடன், எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்: நேற்று காலை மக்களவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

தலைவர்கள் வரவேற்பு 

சசி தரூர் (காங்கிரஸ்): "இது ஒரு நல்ல முடிவு. சஸ்பெண்ட் பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது."

பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுச்செயலாளர்): "வரவேற்கத்தக்க முடிவு. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கட்சி எம்.பி.க்களும் அவையில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்."

ரவி கிஷண் (பாஜக): "அவையில் தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மட்டுமே நடைபெற வேண்டும்."


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory