» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!
வியாழன் 31, ஜூலை 2025 12:01:57 PM (IST)
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008, செப்டம்பா் 29-இல் மகாராஷ்டிரத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.
இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்குா், முன்னாள் ராணுவ வீரர் பிரசாத் புரோஹித் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில், மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்பு படையினா் விசாரித்து வந்த இந்த வழக்கு, கடந்த 2011-இல் என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது.
மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குா் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்றும் அப்போது ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்த பிரசாத் புரோஹித், அபினவ் பாரத் என்ற அமைப்புக்கு வெடிமருந்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் உள்ள நிலையில், மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீதிபதி ஏ.கே. லஹோட்டி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
”மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளில் தான் இருந்தது என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. காயமடைந்தவர்கள் 101 பேர் இல்லை 95 பேர் மட்டுமே, சில மருத்துவ சான்றிதழ்களில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த வாகனத்தின் சேசிஸ் எண் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தில் பிரக்யா சிங் தாக்குருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க அரசு தவறிவிட்டது. பிரசாத் புரோஹித் வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கைரேகை, வெடிமருந்து குப்பை என எதுவும் சேகரிக்கப்படவில்லை.
அபினவ் பாரத் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால் இந்த வழக்கில் இருந்து பிரக்யா சிங், பிரசாத் புரோஹித் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள். வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா எண்ணெய் வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார்? - மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்!
வெள்ளி 6, மார்ச் 2026 12:42:42 PM (IST)
ஈரான் போர்க்கப்பல் மீதான தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மவுனம் ஏன்? - ராகுல் காந்தி கடும் கேள்வி!
வியாழன் 5, மார்ச் 2026 4:08:11 PM (IST)

பீகார் அரசியலில் அதிரடி திருப்பம்: ராஜினாமா முடிவில் முதல்வர் நிதிஷ் குமார்?
வியாழன் 5, மார்ச் 2026 10:49:22 AM (IST)

சித்தூர் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
வியாழன் 5, மார்ச் 2026 8:36:13 AM (IST)

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதன் 4, மார்ச் 2026 4:49:40 PM (IST)

மாநில சுயாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு
புதன் 4, மார்ச் 2026 4:35:59 PM (IST)

