» சினிமா » செய்திகள்

மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களுக்கு சூரி அறிவுரை : வைரமுத்து பாராட்டு!

சனி 17, மே 2025 12:53:54 PM (IST)



மாமன் திரைப்படம் வெற்றிபெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் சூரியை கவிஞர்  வைரமுத்து பாராட்டியுள்ளார். 

சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என சூரியின் மதுரை ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிட்டனர். இது சூரி கண்ணில் பட அவர்களை கண்டித்தும் வருத்தம் தெரிவித்தும் பேசியுள்ளார். அதில் அவர் "தம்பீங்களா இது ரொம்ப முட்டாள்தனம். எங்கேயோ இருந்துட்டு நாம இப்படி பண்ணுனா என் காதுக்கு வரும் என்னை இம்ப்ரஸ் பண்ணலாம்ன்னு அல்லது படம் நல்லா வரணும்னு நீங்க இப்படி பண்ணி இருக்கலாம். ஆனால் ஒரு படம் நல்லா இருந்தா மக்களுக்கு பிடிக்கும், அந்த படம் நல்லா ஓடும். அதை விட்டுட்டு மண் சோறு சாப்டா எப்படி படம் ஓடும்? இது ரொம்ப வேதனையா இருக்கு." என கூறியுள்ளார்.

சூரியின் இந்த கருத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து அவரது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர்

"திரைக்கலைஞர்

தம்பி சூரியைப்

பாராட்டுகிறேன்

தனது திரைப்பட வெற்றிக்காக

மண்சோறு தின்ற ரசிகர்களைப்

பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்

மண்ணிலிருந்து தானியம் வரும்;

தானியம் சோறாகும்.

ஆனால், மண்ணே

சோறாக முடியாது

இந்த அடிப்படைப்

பகுத்தறிவு இல்லாதவர்கள்

தன் ரசிகர்களாக இருக்கமுடியாது

என்று சொல்வதற்குத்

துணிச்சல் வேண்டும்

கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்

தங்கள் ரசிகர் கூட்டத்தை

இப்படி நெறிப்படுத்தி

வைத்திருந்தால்

கலையும் கலாசாரமும்

மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்

மண்சோறு தின்றால் ஓடாது

மக்களுக்குப் பிடித்தால்

மாமன் ஓடும்

பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை

'பலே பாண்டியா'

என்று பாராட்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory