» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வன்னி அரசு வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜூலை 2026 5:55:15 PM (IST)

சட்டமன்றத்திற்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது சபாநாயகர் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் சமூக நீதி அமைச்சருமான வன்னி அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் பேசும்போது, 'முதல்வர் விஜய் சட்டப்பேரவையைப் பூட்டினால் அவரது எலும்பை உடைப்போம்' என மிரட்டல் விடுத்தார்.
இந்தச் சர்ச்சை பேச்சு தொடர்பாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சட்டமன்றத்திற்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்துத் தொடர்ந்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளார். திமுகவினர் பலரும் முதல்வர் மீது மிக மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காகச் சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தைப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தைத் தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மட்டுமே திமுகவினர் கருதி வந்துள்ளனர். தற்போதைய தோல்வியின் விரக்தியால் இவ்வாறு அநாகரிகமாகச் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய வன்முறைப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டமன்றத்திற்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பகிரங்கமாகப் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். வன்முறையாகப் பேசும் திமுகவினருக்கு 'எலும்புகள் எல்லோருக்கும் உண்டு' என்பதை மட்டுமே இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என வன்னி அரசு தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:37:31 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்கத் தடை: விநியோகம் அதிரடி முடக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:55:49 PM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.650 கோடியில் ஏவுகலன் மையம்: முதல்வர் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி ஒப்பந்தம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:40:56 AM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)



TharkuriJul 21, 2026 - 09:18:40 AM | Posted IP 104.2*****