» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க திமுக சதி : ஸ்டாலின் மீது சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!

வியாழன் 2, ஜூலை 2026 12:23:48 PM (IST)


தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைப் பண பலத்தால் கவிழ்க்க திமுக முயற்சி செய்து வருவதாகவும், "விரைவில் தேர்தல் வரும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்ததன் பின்னணியில் உள்ள ரகசியம் தற்போதுதான் தெரியவந்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வி.சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் என்பது முழுமையாக முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு விஷயமாகும். டெல்லியில் தனக்கு நம்பிக்கையான ஒரு நபர் இருக்க வேண்டும் என்று கருதி முதலமைச்சர் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார். இதில் விவாதிப்பதற்கோ அல்லது பெரிதுபடுத்துவதற்கோ எந்த விஷயமும் இல்லை" என்று தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தவெக எம்.எல்.ஏ.-க்கள் பேரம் பேசப்படும் விவகாரம் குறித்துப் பேசிய சண்முகம், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் பொதுமக்கள் தவெக-விற்குப் பெருவாரியாக வாக்களித்தனர். ஆனால், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை திமுகவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே, கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசி தவெக எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்க திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஜனநாயகப் படுகொலையான இத்தகைய குதிரை பேர நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சாடினார்.

மேலும், "விரைவில் தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்ததன் உண்மையான பின்னணி இப்போதுதான் நமக்குத் தெரியவருகிறது. தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்கள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். இந்த குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 


மக்கள் கருத்து

BalaJul 2, 2026 - 02:52:14 PM | Posted IP 162.1*****

Sofa pesuthu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory