» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி சாதனை: உதவி இயக்குநராக நியமனம்!
வெள்ளி 19, ஜூன் 2026 8:10:26 AM (IST)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 மாணவ-மாணவிகள் உடல் கருகி பலியான சோகம் பலரது நெஞ்சை விட்டும் இன்னும் அகலவில்லை. இந்தத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜெனிபர் என்ற மாணவி, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்து நடைபெற்ற சமயத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் (தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர்). அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவரது சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு வியந்த ஜெனிபர், அவரைத் தன் வாழ்வின் முன்மாதிரியாகக் கொண்டு படித்துச் சாதித்துள்ளார்.
தற்போது அரசுப் பணி நியமன ஆணை பெற்றுள்ள ஜெனிபர், தனது சகோதரருடன் சென்று மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆணைக்காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களைத் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து சாதித்துள்ள ஜெனிபர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது: "கும்பகோணம் தீ விபத்தில் நாங்கள் தப்பித்து வந்த போது, எங்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சார்தான் பாடப்புத்தகங்கள், பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட நிறைய உதவிகளைச் செய்து கொடுத்தார். அவருடைய செயல்பாடுகளை ஒரு வாரம் அருகில் இருந்து கவனித்தோம். அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு எவ்வளவு சேவைகள் செய்யலாம், மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படி மாற்றலாம் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். அவரை முன்மாதிரியாக வைத்தே தற்போது இந்த நிலையை அடைந்துள்ளேன்.
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் என்பது நல்ல பதவிதான், இதன் மூலம் கிராம மக்களுக்கு நிறையச் சேவை செய்ய முடியும். எனினும், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, அதில் சாதித்து ஐஏஎஸ் அதிகாரியாகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய இறுதி இலக்கு" எனத் தெரிவித்துள்ளார். தீ விபத்தின் சோகம் ஆறாத வடுவாகப் பலரது மனங்களில் இருக்கும் வேளையில், அதிலிருந்து மீண்டு வந்து சாதித்துள்ள ஜெனிபரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெரும் ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)

மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவா? சி. மகேந்திரன் தவெக-வில் இணைந்ததால் சிபிஐ பரபரப்பு அறிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:44:00 PM (IST)

தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)


