» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு

புதன் 20, மே 2026 8:48:59 AM (IST)



தேர்தல் களத்தில் அறிவித்த 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, இலவச சிலிண்டர், தங்கம் உள்ளிட்ட எந்தவொரு கவர்ச்சிகரமான வாக்குறுதியையும் புதிய தவெக அரசு நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் 6 மாத காலத்திற்குள் அதிரடி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்பார்" என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தனது தொகுதிக்குட்பட்ட தென்திருப்பேரை மற்றும் குரங்கணி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக நன்றி தெரிவித்தார்.

அப்போது மெயின் ரோடு பேருந்து நிலையம் மற்றும் முக்கியச் சந்திப்புகளில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: "தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது எவ்விதத் தடையுமின்றி மாதந்தோறும் ஏழை எளிய பெண்களுக்கு 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வந்தார். ஆனால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு 2,500 ரூபாய் தருவதாகக் கூறினார்.

ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும் அவர் கூறியபடி 2,500 ரூபாய் வழங்கவில்லை; மாறாக முன்பு திமுக அரசு கொடுத்த அதே 1,000 ரூபாயைத் தான் தற்போதும் தொடர்ந்து வழங்கி ஏமாற்றி வருகிறார். ஆண்டிற்கு ஆறு இலவச சிலிண்டர்கள் தருவதாகக் கூறினார்கள். சென்னை வரை பெண்கள் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்துகளில் இலவசமாகச் செல்லலாம் என்றார்கள். தங்கம் தருவதாகப் பறைசாற்றினார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை எந்தவொரு வாக்குறுதியையும் நடைமுறைப்படுத்த புதிய அரசு எவ்வித அவசர நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களின் ஏமாற்றத்தால் இன்னும் 6 மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் நகர்வும் ஆட்சி மாற்றமும் கட்டாயம் ஏற்படும். மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மக்களுக்குப் பல்வேறு உன்னதமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவார். அவரே தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராகவும் இருப்பார்." என்று பேசினார்.

தென்திருப்பேரையைத் தொடர்ந்து அவர், தண்ணீர் பந்தல், மேலாத்தூர் ஊராட்சி மெயின் ரோடு, வடக்கு ஆத்தூர், ரதவீதி, முஸ்லிம் தெரு, பேட்டை தெரு, சேர்ந்தபூமங்கலம், செல்வன்புதியனூர் மற்றும் கடற்கரை கிராமமான புன்னக்காயல் ஆகிய பகுதிகளில் நன்றியறிவிப்பு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளில், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory