» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல வணிக நிறுவனங்களில் போலி ஆல் அவுட் திரவப் பாட்டில்கள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

ஞாயிறு 17, மே 2026 8:05:01 AM (IST)



தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவனங்களில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி கொசு விரட்டி திரவ பாட்டில்களை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் விக்டோரியா சாலை மற்றும் ஜீன் பேக்டரி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில், புகழ்பெற்ற நிறுவனத்தின் முத்திரையோடு போலி கொசு விரட்டி திரவங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுவதாகப் பாபு என்பவர் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் அளித்துள்ளார்.

இத்தகவலின் அடிப்படையில், அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று (மே 16) தூத்துக்குடிக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய இந்த அதிரடி வேட்டையில், தூத்துக்குடியின் முக்கிய வணிக நிறுவனங்களான 'வேலவன் ஸ்டோர்ஸ்' மற்றும் 'குரு டிரேடர்ஸ்' ஆகிய இரு கடைகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது, சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்ற 'ஆல் அவுட்' கொசுவர்த்தி தைல பாட்டில்கள் போன்றே அச்சு அசலாகப் போலியாகத் தயாரிக்கப்பட்ட 1,014 போலி திரவ பாட்டில்கள் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.86,190 ஆகும். இதையடுத்து, அந்தப் போலி கொசு விரட்டி பாட்டில்கள் அனைத்தையும் போலீசார் முறைப்படி பறிமுதல் செய்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் வர்த்தக முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி, போலிப் பொருட்களை விற்றுப் பொதுமக்களின் சுகாதாரத்தோடு விளையாடிய குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் உரிமையாளர்கள் / மேலாளர்கள் 2 பேர் மீது அறிவுசார் அமலாக்கப் பிரிவு போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரிவினரின் உதவியோடு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை காலத்தின் இறுதிப் பகுதியில் கொசுக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள சூழலைப் பயன்படுத்தி, தூத்துக்குடியின் முக்கியக் கடைகளிலேயே இத்தகைய போலிப் பொருட்கள் விற்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் உள்ளூர் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory