» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணி : கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!

வியாழன் 30, ஏப்ரல் 2026 8:46:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பணிகளைத் துல்லியமாகக் கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒருவர் வீதம் மொத்தம் 6 பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு, மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் என பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், தற்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த 3 மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகளைக் கூடுதலாகத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ் தூத்துக்குடி தொகுதிக்கும். சோடிங்புயீ ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கும், அரவிந்த் குமார் வெர்மா ஓட்டப்பிடாரம் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக இருப்பார்கள். விளாத்திகுளம் தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாநில சிவிஸ் சர்வீஸ் அதிகாரி தீபக் வசந்த் கிர்ஷ்சாகர், திருச்செந்தூர் தொகுதிக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி பாரத் பூஷன் பிரசாத், கோவில்பட்டி தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி ஜித்தேந்திர சாகேப்ராவ் ககுஸ்தே ஆகியோர் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நியமிக்கப்பட்டுள்ள 6 பார்வையாளர்களும் வரும் மே 2-ஆம் தேதி தூத்துக்குடி வந்தடைவார்கள். அன்றிலிருந்து அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory