» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!

வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

புளியங்குடி அருகே பள்ளி வளாகத்தில் கார் மோதி நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய நடத்திய சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிசாமி - வேல்மயில் தம்பதியரின் ஒரே மகள் சிவயாழினி (4). இவர் புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஸ்ரீகண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார்.

கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது, பள்ளி வளாகத்திற்குள் அதிவேகமாக வந்த கார் ஒன்று சிறுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். "மதுபோதையில் கார் ஓட்டி உயிர் பறித்தவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என வலியுறுத்தி, இரவு முழுவதும் சாலையிலேயே அமர்ந்து போராடினர். வெயில் சுட்டெரித்த போதும் தார்பாய் பந்தல் அமைத்து 2-வது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய  காரை ஓட்டி வந்த மென்பொருள் பொறியாளர்  ராம்காந்த் (42) மற்றும் அவரது நண்பர் செந்தில்ராஜா (32) மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவரும் விபத்தின் போது மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 20 மணி நேரப் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பள்ளியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதோடு, பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory